"காளியும் ஒரு லெளகீகன்"



 "காளியும் ஒரு லெளகீகன்"


"முள்ளும் மலரும்" 

மறக்க முடியாத எளிய மனிதர்களின்

செறிந்த அன்பின்பால் வார்க்கப்பட்ட

கதாபாத்திரங்களால் ஆன கதை.


இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த

தொடர்ந்து வரும் காட்சிகள் உள்ளது


நீங்கள் நினைக்கும் எந்த உணர்ச்சிவயமான காட்சிகளும் கிடையாது.


தன் தங்கையைத் தவிர வேறெந்த பெண்ணுடனும் பேசிடாதவன் காளி


வேலை முடிந்து வீட்டுக்கு வர

தன் வீட்டுத் தாழ்வாரத்தில் ஒரு இளம்பெண் ஆடைகள் விலகியதறியாமல்

நின்மதியாய் மயங்கிகிடப்பதைப்போல்

உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து

செய்வதறியாது ஒருவிதமான சிறு படபடப்பு எழ அதை சட்டென அடக்கி 

பெரியமனுஷனின் தோரணையில்

தொண்டையை செறுமியபடி கணைத்துக்கெடுத்து அவள் (ஃபடாஃபட் )

முழிப்புக்கு வர உசுப்புகிறான்


கண்களை அரைத்துலக்கமாக கசக்கியபடி

குறைத்தூக்கத்தோடு சோம்பலோடு உடல் மலர்த்தி அவனை அசட்டையாகப் பார்க்கிறாள். காளி அவளை விறுவிறுப்பாக பார்க்கிறான்.


தன் தலையை சொறிந்தபடி கலைந்தவிழ்ந்திருக்கும் அவள் வறண்ட கூந்தலை வலுக்கட்டாயமாய் கொத்தாக வணைந்து கொண்டு காளியைக் காண்கிறாள்


அவன் அதே பார்வையோடு சிறு முறைப்பும் கம்பீரத்தோரணையுமாய்

செவ்வனே பார்த்துக்கொண்டிருக்க


அடுத்து  பின்வாங்கிக்கொண்டிருக்கும் அலைபோல

இருந்த தன் மடிப்பான பாவாடையை

தன் முழங்கால்தளுக்கு மேல் மறைக்கும் பொருட்டு இழுத்துவிட்டு மீண்டும் அவன் முகம் காண்கிறாள்

அவன் இமைகள் சற்றும் சிமிட்டுவதாக இல்லை.


இதுமட்டும்தான் பாக்கி என்பதாக

மடியில் ஒரு பொருட்டின்றி கிடக்கும் தன் மேலாடையை 'தொலை' என்பதுபோல் மார்பில் அள்ளிப்போட்டுக்கொண்டு 

கலைந்திருந்த தன் அவயங்களின் உடைமைகளை அதனதன் இருப்பில் பொருத்தி ஒருவழியாக தன்னை அமைவாக பூரணம் செய்துகொண்டுவிட்டு

அவன் பார்வையின் முடிவுக்காக

முடிவாக ஏறெடுக்கிறாள் அவனை


காளியின் பார்வை ஈயாடாது அவளைத் தொடர்ந்து மொய்க்க

' ஏன்யா முன்ன பின்ன பொண்ணயே பாத்ததில்லையா' என்று காளியின்

ஜென்டில்மேன் போலியை கிழிப்பதுபோல் கேட்கிறாள்.

சட்டென சுயநினைவுக்கு திருந்தியவன் (திரும்பியவன் அல்ல) போல் சுருக்கென்றாக திகைத்துப்போவான் காளி.


தங்கை வாசல்வந்து  'வாண்ணே ' என்று அழைத்தவுடன் 'உன் அண்ணனா...? ' என்று

ஒரு மேலுக்கொரு இளிப்பை உதிர்க்கிறாள் (அடைக்கலம் தந்தவளின் அண்ணனாயிற்றே )

அண்ணனிடம் அவளின் குணத்தைப்பற்றி

இப்படி சுருங்க உரைக்கிறாள் ' பாவம்ணே அது ரொம்ப வெகுளி '.

அவன்; எப்டி எப்டி ?'வெகுளிண்ணே' 

நீயே வெகுளி நீபோய் அத வெகுளிங்குறியா என்று கூறும் காளியிடம்


அண்ணன் தங்ககையென அநாதரவாய் அவர்களைப்போலவே இருக்கமவர்களுக்கு கருணைப்பொங்க சிபாரிசு செய்து பக்கது வீட்டிலேயே தங்கவைக்க அனுமதியும் வாங்கி கூடவே அந்த பெண்ணின் அம்மாளுக்கு ஒரு வேலையும் ஏற்பாடு செய்துதர கோருகிறாள் அதற்கு அவன்

ஏன் அந்த பொண்ணு வேலைக்குப் போகாதாமா? என்றதற்கு

அதுக்கு உடம்பு வணங்காதாம் அதுங் ஆத்தா சொல்லி அழுவுதுண்ணே.


ஆமாமா நல்லா திண்ணுட்டா படுத்து தூங்குரத பாரு நல்லா  கோயில்மாடாட்டம் 

நீ வேண்ணா அதுன் தலைய தடவிப்பாரேன் கொம்பு இருக்கும்.

தங்கை அப்பாவியாய் திகைக்க. மேலும் அவன். இருக்கும்டா... என்று தங்கையை அழகாக சிரிக்கவைத்துவிட்டு வேலைக்குப் புறப்பட காட்சி நிறைகிறது.


எத்தனையோ கண்கலங்கும் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளும் உணர்ச்சிவயமான காட்சிகள் படம் முழுதும் இருப்பினும்

இந்த காட்சிகளில் அப்படி என்ன இருக்கு 

என்றால்.


ஒரு பெண்ணின் ஆடை விலகுதலில்

அன்னிச்சையாக தடுமாறும் ஆணின் பாலுணர்வு புத்திக்கு 

தங்கைக்காகவே வாழுபவனும்,  ஊரில் நல்ல மரியாதை பெற்றவனும் வேண்டுவோர்க்கு மனமிறங்கி வந்து உதவிகள் செய்பவனும் ஒரு தன்மானத்திமிரில் குடிக்கொண்டவனும் யோக்கியனுமான காளியும் ஒரு விதிவிலக்கில்லை அவனும் ஒரு லெளகீகன் என்பதை இக்காட்சியுனூடே யதார்த்தமாய் சித்தரித்து ரசிகனுக்கு கடத்தியிருப்பார் இயக்குனர் 

மகேந்திரன்.


வணங்குகிறேன்

மகேந்திரன் சார்.


ச.அர்ஜூன்ராச்.

Comments